சென்னை: ஏன் பத்து வருடமாக படத் திட்டத்தினை மாற்றவில்லை என்று 'நீட்' விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி கிருத்திகா என்பவர் நீட் தேர்வின் காரணமாக தனக்கு மருத்துவ சேர்க்கையில் பாதிப்பு உண்டானதாக கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கானது இன்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இன்று வெளியாகியுள்ள நீட் தரவரிசை பட்டியல் தொடர்பான விபரங்களை நீதிமன்றம் கோரியது. அவற்றை இன்று மதியம் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்தார். அப்பொழுது நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மதியம் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
தமிழக அரசினை பொறுத்த வரையில் ஏன் கடந்த பத்து ஆண்டுகளாக பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை? அதே போல கற்பிக்கும் முறைகளிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வினை பொறுத்த வரையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி கேள்விகள் கேட்கப்பட்டால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள்?
அதேபோல இரண்டு வகையிலான பாடத் திட்டங்கள் இருக்கும் பொழுது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்? நீட் தேர்வினைப் பொறுத்தவரையில் அதனை நடத்துவதற்கு என்று தனியான நடுநிலையான அமைப்பு வேண்டும். மாநில பாடத் திட்டத்தில் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களையே பெறுகின்றனர். இதன் காரணமாக தற்பொழுது பெற்றோர்களும் மாணவர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.
நீட் விவகாரத்தை தமிழக அரசின் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.