அரியலூரில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே விமானத்தில் இன்று திருச்சி புறப்பட்டுச் சென்றனர்.
அதிமுகவின் பொதுச் செயலராகவும், முதல்வருமாக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கடந்த 6 மாதங்களாக அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் என இரு அணிகளாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில், திங்கள்கிழமை கருத்து வேறுபாடுகளை களைந்து, இரு அணிகளும் ஓரணியாக இணைந்தன.
இதைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, முதல்வரும், துணை முதல்வரும் கைகுலுக்கி இணைந்த கைகளாக காட்சி தந்தனர். இந்நிலையில், அரியலூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசு சார்பில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இருவரும் இணைந்து பங்கேற்கின்றனர்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றனர். உடன் மக்களவை சபாநாயகர் தம்பிதுரையும் சென்றார்.
இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு நடைபெறும் விழா என்பதால், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.