அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: தெலங்கானா முதல் கன்னியாகுமரி கடல் பகுதி வரை, வட தமிழகத்தின் கடலோரப் பகுதி வழியாக நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றனர்.
மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 70 மி.மீ., வால்பாறையில் 60 மி.மீ., ஜி பஜாரில் 50 மி.மீ மழை பதிவானது. நடுவட்டம், பென்னாகரம், தளி, தருமபுரி, பாலக்கோடு, பொன்னேரி, எண்ணூர், திருப்பத்தூர், சென்னை விமான நிலையப் பகுதிகள், வாழப்பாடி, பரூர், உதகமண்டலம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.