செப்டம்பர் முதல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் உரிமம் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அலுவலக வளாகத்தில் உள்ள பல்லவன் இல்லத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த காவல் துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாகன விபத்துகளைத் தடுக்கவும், சாலைப் பாதுகாப்பைப் பின்பற்ற வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். சீட்பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்குவது அவசியம். வரும் செப்.1-ஆம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்துக் கொள்ளவும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த மாதம் முதல் மின்சாரப் பேருந்து இயக்கம்: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மின்சார பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மின்சார பேருந்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் இருக்கைகள், இயக்கம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
சென்னை பல்லவன் இல்ல வளாகத்தில் இருந்து மெரீனா காந்தி சிலை வரையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இப்பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டணம் குறித்து அதிகாரிகள் மூலம் நிர்ணயம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து சென்னையில் அடுத்த மாதம் முதல் கட்டமாக ஒரு மின்சார பேருந்து மட்டும் இயக்கப்படும். அதைத் தொடர்ந்து இப்பேருந்துக்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பை அடுத்து படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.