சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா உள்ளிட்ட மூவரின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா உள்ளிட்ட மூவரின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

புதுதில்லி:  சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்  சாட்டப்பட்ட வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, அவரது அண்ணி இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் தற்பொழுது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமித்தவா ராய் ஆகிய இருவரும் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் தற்பொழுது பினாகி சந்திர கோஷ் ஓய்வு பெற்று விட்டதால் தற்பொழுது நீதிபதிகள் பாலி ரோஹிங்க்டன் நாரிமன் மற்றும் அமித்தவா ராய் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடப்பதாக இருந்தது.

ஆனால் ரோஹிங்க்டன் நாரிமன் விசாரிப்பதற்கு எதிராக சசிகலா மனு தாக்கல் செய்திருந்ததால், அவர் இந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். எனவே நீதிபதிகள் அமித்தவா ராய் மற்றும் பாப்டே இந்த சீராய்வு மனுவினை விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையானது சாதாரண வழக்குகளைப் போல அல்லாது, நீதிபதிகளின் சேம்பரில் மட்டுமே நடைபெறும். அது போலவே எழுத்துபூர்வமான வாதங்கள் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.வாதங்கள் எதுவும் கிடையாது.முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பின் சாராம்சங்கள் மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அதன்படி சசிகலா உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவினை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.நீதிபதிகளின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் தாங்கள் எந்த பிழையும் கண்டறியவில்லையென்று தெரிவித்துள்ளனர். 

இனி இந்த தண்டனையில் இருந்து விடுபடுவதற்கு அநேகமாக வேறு வழிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com