ஏடிஎம் மையத்தில் நிரப்ப வேண்டிய பணம் கையாடல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், நடிகர் தாடி பாலாஜி திருப்பூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் செக்யூரிட்டி டிரெய்ன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், தனியார் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் திருப்பூர் கிளை மூலம் சில தனியார் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணி நடைபெற்று வந்தது.
அந்நிறுவனத்தில் பணி செய்த சிலர், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, ஏடிஎம் மையங்களில் நிரப்ப வேண்டிய பணத்தில் ரூ. 2.2 கோடியை கையாடல் செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருப்பூர் போலீஸார், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 6 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மோசடி பணத்தில் ரூ. 5 லட்சத்தை சினிமா நடிகர்களைக் கொண்டு 'நட்சத்திர இரவு' நிகழ்ச்சி நடத்த, நடிகர் தாடி பாலாஜியிடம் முன்பணமாகக் கொடுத்ததாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நடிகர் பாலாஜியும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு தொடர்பாக நடிகர் பாலாஜி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.