பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சட்டப் பேரவையைக் கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என்று திமுக
பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சட்டப் பேரவையைக் கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநருக்கு செவ்வாய்க்கிழமை அவர் எழுதிய கடிதம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனித்தனியாக கடிதங்கள் வழங்கியுள்ளனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து, வரலாறு காணாத அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதே போன்றதொரு சூழ்நிலை கர்நாடகத்தில் ஏற்பட்டபோது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடிதம் கொடுத்த நாளிலேயே சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் அப்போதைய முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏதாவது ஏற்படும் நிலையில், அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான அரசு தொடரவும், பேரவையின் நம்பிக்கையைப் பெறுவதில் நிலை நாட்டப்பட்டுள்ள ஜனநாயக மரபுகளைத் தகர்க்க வாய்ப்பு அளிப்பதாகவும் அமைந்துவிடும்.
தற்போது பதவியில் உள்ள முதல்வர், கடந்த முறை பெரும்பான்மையை நிரூபித்தபோது நடந்தது போல குதிரை பேரம் போன்ற தீய செயல்களில் ஈடுபடும் சூழலுக்கு வழியேற்படுத்தும். எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். அதன் மூலம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் புகழ்மிக்க தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அரசியலமைப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் கூறுகளைப் பாதுகாக்க வேண்டும்.
முஸ்லிம் லீக் கடிதம்: இதே விவகாரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபுபக்கரும் கடிதம் எழுதியுள்ளார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதுபோன்ற நிலை கர்நாடகத்தில் ஏற்பட்டபோது, எடியூரப்பா அரசை பெரும்பான்மை நிரூபிக்க அந்த மாநில ஆளுநர் உத்தரவிட்டார். அதைப் போல தற்போதைய அரசையும் சட்டப்பேரவையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com