மருத்துவ மாணவர்களைத் தேடி பல்கலைக்கழகம் எனும் திட்டம் தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ளுதல், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், வெளியிடுதல், பல்கலைக்கழக சிகிச்சை முறை போன்றவற்றை மேற்கொள்ளும் வகையில், 'மருத்துவ மாணவர்களைத் தேடி பல்கலைக்கழகம்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பயிலரங்கு தொடர்ந்து 3 தினங்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை இப்பயிலரங்கை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கிவைத்தார்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் கே. சித்திஅத்தியமுனவரா தலைமை வகித்தார். துணை முதல்வர் கண்ணன், கல்லூரி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், துறைத் தலைவர்கள் சாந்தாராம், ரேவதிபாலன், மோகன் ஆறுமுகப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பட்ட மேற்படிப்பு பயிலும் 130 மருத்துவ மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். மருத்துவப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
அப்போது துணைவேந்தர் கூறியது: உலக அளவில் தமிழகம் மருத்துவக் கல்வியில் முன்னிலை வகிக்கிறது. மருத்துவக் கல்வியை மேலும் தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், பட்ட மேற்படிப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியை தொடர்ந்து, நாகர்கோவில், மதுரை, கோவை மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டு டிசம்பர் மாதத்திற்குள் இத்திட்டம் தொடங்கப்படும். விரைவில், சித்தா, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
அடுத்த கல்வியாண்டுமுதல் (2018-19) திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கான இடம் 150இல் இருந்து 250 ஆக உயர்த்தப்படும் என்றார் அவர்.