வேலூர்: தமிழக அரசு ஒரு மாத பரோல் வழங்கி அரசாணை பிறப்பித்ததை அடுத்து வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் விடுதலையானார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991-ஆம் ஆண்டு,மே 21-ஆம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி,முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல் முறையீட்டில் தூக்கு தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஆனால் ஏறக்குறைய கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வரும் அவரை விடுதலை செய்யக் கோரி அவரது தயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். அல்லது குறைந்த பட்சம் பரோலிலாவது விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தார்.
சமீபத்தில் அவரது தந்தை உடல்நலக் குறைவால் வாடுவதால் அவருக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று அரசிடம் அவரது தாயார் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு தற்பொழுது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவானது வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு இன்று இரவு கிடைத்தது. உடனடியாக அது தொடர்பான சிறை சம்பிரதாயங்கள் முடிந்தவுடன், காவல் துறை பாதுகாப்புடன் பேரறிவாளன் சிறையில் இருந்து வெளியேறினார்.
கைது செய்யப்பட்ட 26 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பேரறிவாளன் தற்பொழுதுதான் சிறையிலிருந்து வெளி வருகிறார். தற்பொழுது ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு செல்கிறார். அவருடன் 15 பேர் கொண்ட காவல்துறை குழு உடன் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.