சென்னை: திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் போஸின் வெற்றிக்கு எதிரான வழக்கில்,தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதி இடைதேர்தல்கள் நடைபெற்றது. அப்பொழுது அதிமுக பொதுச் செயலாளர் என்கின்ற வகையில் வேட்பாளர்களுக்கான 'பார்ம் பி' படிவத்தில், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது.
பின்னர் நடைபெற்ற தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் போஸ் வெற்றி பெற்றார். அப்பொழுது அவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற திமுகவின் சரவணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது.
அப்பொழுது நீதிமன்றம், 'அதிமுக வேட்பாளர் போஸ் வேட்புமனுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட 20 ஆவணங்களுடன், தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், ராஜேஷ் லக்கானி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டுமென்று கூறி, வழக்கினை 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அப்படி அந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது,தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.