முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள காங்கிரஸ் உறுப்பினருக்கான அறைக்கு கே.ஆர்.ராமசாமி புதன்கிழமை வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றது குறித்து சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா விஜயதரணி, எச்.வசந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதினார். கடித விவரம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் திரும்பப் பெற்றுள்ளனர். இதன் மூலம் பெரும்பான்மையை அரசு இழந்துள்ளது.
எனவே, சட்டப் பேரவையை உடனே கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.