வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: ஆந்திர கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றனர்.
பாளையங்கோட்டையில் சதம்: கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான வானிலை நிலவி வந்தது. ஆனால், வியாழக்கிழமை பாளையங்கோட்டையில் 101 டிகிரி வெயில் பதிவானது.
மழை அளவு: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் மேலாலத்தூர், வாலாஜாவில் தலா 30 மி.மீ., குடியாத்தம், தஞ்சை மாவட்டம் பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தலா 20 மி.மீ., மழை பதிவானது. சின்னக்கல்லாறு, புதுச்சேரி, தேவாலா, கடலூர், வால்பாறை, ஆர்.கே.பேட்டை, அரக்கோணம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.