துணைநிலை கிரண்பேடி சனிக்கிழமை தனது 100-வது வார கள ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் 400 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆளுநராக பொறுப்பேற்றவுடன் கிரண்பேடி கடந்த 2016 ஜூன் 25-ம் தேதி கள ஆய்வுப் பயணத்தை தொடங்கினார். சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் அதிகாலையில் கிரண்பேடி தனது ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பெரியகால்வாய் சீரமைப்பு, தூர்வாரும் பணியை தொடங்கினார். பின்னர் பொதுமக்கள், சமூகவலை தளங்கள் மூலம் பெறப்பட்ட பொதுப் பிரச்னைகள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை கள ஆய்வில் மேற்கொண்டார்.
குறிப்பாக தூய்மையான புதுச்சேரி, ஏரி, குளம், கால்வாய்கள் சீரமைப்பு, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையம், பஸ் நிலையம், கோயில்கள், உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதோடு மருத்துவமனைகள், மின்தகன மேடை, விமான நிலையம், காவல்துறை வளாகம், மத்திய சிறை போன்றவற்றிலும் ஆய்வு மேற்கொண்ட அவரது தற்போது 100-வது வாரத்தை எட்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து சைக்கிளில் வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு கிரண்பேடி சென்றார். அவருடன் மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர், அதிகாரிகள் என நூற்றுக்கு மேற்பட்டோர் உடன் சென்றனர்.
ஏரிக்கரையை மேலும் சீரமைக்கும் வகையில் 3கிமீ சுற்றளவில் 400 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கிரண்பேடி தொடங்கி வைத்தார். இவற்றை
அப்பகுதி மக்களே பராமரித்து பாதுகாத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேல்ராம்பட்டு ஏரிக்கரையை மக்கள் விரும்பும் சுற்றுலா தலமாக மாற்றுவதும் இதன் ஒரு அங்கமாகும்.ஆளுநர் கிரண்பேடியுடன், சிறப்பு அதிகாரி அம்ருதா, வணிகவரி ஆணையர் சீனிவாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் குமரன், பாதுகாப்பு அதிகாரி கார்த்திகேயன், மற்றும் பலர் உடன் சென்றனர்.
மேலும் இந்த 100 வார கள ஆய்வுப் பயணம் தொடர்பான புகைப்படங்கள், செயல்பாடுகள் ஆளுநர் மாளிகை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.