பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை (ஆக. 26) சென்னை திரும்புகிறார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்கிறார். இதற்காக சனிக்கிழமை இரவு அவர் சென்னை வருகிறார். ஆளுநர் மாளிகையில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரவேற்கிறார். இதையடுத்து, கடந்த 22- ஆம் தேதி காலையில் மும்பை சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ், சனிக்கிழமை மாலை சென்னை திரும்பவுள்ளார்.
பரபரப்பான அரசியல்: எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் அளித்த கடிதத்தின் மீது ஆளுநர் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்பதே அரசியல் அரங்கில் தற்போது எழுப்பப்படும் வினாவாக உள்ளது.
இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கூட்டாக ஆளுநரை சந்திக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆளுநர் சனிக்கிழமை மாலை சென்னை திரும்பியதும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று அதிமுக தரப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.