"தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக-வில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் கேலிக்கூத்தாக உருவெடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மொத்தம் 234 எம்எல்ஏக்களைக் கொண்ட தமிழக சட்டப் பேரவையில் ஆளும் அதிமுகவுக்கு 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட வென்ற சென்னை ஆர்.கே.நகர் பேரவைத் தொகுதிக்கு மட்டுமே எம்எல்ஏ யாரும் இல்லை. பேரவையில் எதிர்க்கட்சியான திமுகவுக்கு 89 எம்எல்ஏக்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கு 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர்.
இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்கள் தற்போது புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின், மேலும் 2 எம்எல்ஏக்களும் தினகரன் அணியில் இணைந்தனர்.
இந்நிலையில், அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து விமர்சித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்) ஞாயிற்றுக்கிழமை சில பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப் பேரவையில் தற்போது 233 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சூழலில், ஆளும் தரப்பு தனது பலத்தை செயற்கையாக மாற்றியமைப்பதை ஆளுநர் அனுமதிக்கக் கூடாது. ஆளும் அதிமுக செய்து வரும் அரசியலானது மலிவான நகைச்சுவை என்பதில் இருந்து கேலிக்கூத்தாக மாறி வருகிறது. தமிழக ஆளுநர் எங்கே இருக்கிறார்? என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.