பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே ஏற்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 15 நாள்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வந்த நிலையில், கடந்த ஜூன் 16 - ஆம் தேதி முதல், இவற்றின் விலையை தினசரி நிர்ணயம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.
இதன் விளைவாக கடந்த ஜூலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 3.67 என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு ஓசையின்றி விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த அதிகபட்ச விலை உயர்வின் காரணமாக அனைத்துப் பொருள்களின் விலைகளும் அதிகரித்து, பொது மக்களுக்கு மேலும் மேலும் பொருளாதார இழப்பையும், நிதிச் சுமையையும் மத்திய அரசு ஏற்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது.
மக்கள் நலனைக் காக்கும் வகையில், எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.