சென்னை: அரசியல் மேடையாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கட்சராயன் ஏரி தொடர்பான வழக்கில் திமுகவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன் குட்டை ஏரியினை திமுகவினர் தூர் வாரினர். அந்த ஏரியினை ஸ்டாலின் பார்வையிட வருவதாக எழுந்த தகவலுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஏரியை ஸ்டாலின் பார்வையிட போலீஸ் தடுப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் இளங்கோ மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி ஏரியினை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கி இருந்தார். ஆனாலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏரியை பார்வையிடுவதற்காக வரும் போது, அவரை வரும் வழியிலேயே போலீசார் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது. ஸ்டாலின் ஏரியை பார்வையிடுவதற்கு தடை விதித்தது ஏன் என்று கேட்ட நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினர்.
பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது ஸ்டாலினை தடுத்தது சட்டப் பிரச்னையா அல்லது கெளரவப் பிரச்னையா எனவும், குறிப்பிட பகுதி தடைவிதிக்கப்பட்ட பகுதியா என்றும் வரிசையாக கேள்விகளை அடுக்கினர்.
ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமென்பதாலேயே ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 8-ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சர்ச்சைக்குரிய சேலம் கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அவருடன் சேர்ந்து 25 பேர் அந்த ஏரியினைப் பார்வையிடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கிரிராஜன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசியல் மேடையாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று திமுகவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் கட்சராயன் ஏரி தொடர்பான வழக்கில் திமுக முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். கட்சராயன் ஏரியினை பார்வையிட செல்வதாக கூறி இருந்த பொழுது, நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான ஸ்டாலின் அன்றே விடுவிக்கப்பட்டு விட்டதால் கிரிராஜனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.