எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கைக்கு ஆளுநர் சொன்ன பதில்?

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பேரவை விவகாரத்தில் தலையிட முடியாது என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியிருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கைக்கு ஆளுநர் சொன்ன பதில்?


சென்னை: தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பேரவை விவகாரத்தில் தலையிட முடியாது என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியிருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, ஆளுநர் மாளிகையில் இன்று காலை சந்தித்துவிட்டு வெளியே வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேர் ஆளும் அரசுக்கு எதிராக கோரிக்கை மனு கொடுத்திருப்பதால் மட்டும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறிவிட முடியாது.

அந்த 19 எம்எல்ஏக்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலோ, வேறு கட்சியில் இணைந்தாலோ தான், பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூற முடியும்.

ஒரு கட்சியினர், அவர்களுக்கு இடையே சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அதில் நாங்கள் தலையிட முடியாது. சட்டம் அதற்கு இடம் தரவில்லை என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த நாங்கள், சட்டப்படி இந்த விவகாரத்தில் தலையிட முகாந்திரம் இருக்கிறது. 19 பேர் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். உங்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள். எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறுக் கூற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

முன்னதாக, தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழக ஆளுநருடன் திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை சந்தித்துப் பேசினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 4 தலைவர்களும் இன்று காலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர்.

ஆளுநர் மாளிகையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த தலைவர்கள், தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று 4 வலியுறுத்தினர்.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி தமிழக முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிடக் கோரியிருந்த நிலையில், இன்று மேலும் 4 அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com