செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள், அசல் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 3-ன்படி வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல், எந்தவொரு நபரும் பொது இடத்தில் வாகனம் ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தின்படி, பொது இடத்தில் சீருடையில் உள்ள காவல்துறை அதிகாரி, வாகன ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமத்தைக் கேட்டால், கண்டிப்பாக வழங்க வேண்டும்.
மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 181-இன்படி ஓட்டுநர் உரிமம் இல்லாம் வாகனத்தை ஓட்டினால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கலாம்.
சாலை பாதுகாப்புக்காக உச்ச நீதிமன்றக் குழு விபத்துகளைக் குறைக்கும் வகையில், போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், ரத்து செய்யவும் அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.
எனவே செப். 1-ஆம் தேதி முதல் வாகனங்களை ஓட்டும்போது, அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.