முதல்வர் பழனிசாமி, அவரது அமைச்சர்கள் பெயரில் சுட்டுரை(டுவிட்டர்) பக்கம் தொடங்கப்பட்டு வருகிறது.
பொதுப் பிரச்னைகள் வெளிப்படும் போது, அதுதொடர்பாக சுட்டுரை பக்கங்களில் கருத்து தெரிவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்பட சில அமைச்சர்கள் பெயரில் சுட்டுரை பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக இந்த பக்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. அந்த பக்கங்களை தொடர்ந்து பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அனைத்து அமைச்சர்களுக்கும் சுட்டுரை பக்கங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமலுக்கு பதிலடி: தமிழக அரசு, அமைச்சர்கள் மீது நடிகர் கமல்ஹாசன் தனது சுட்டுரை பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவருக்கு சுட்டுரை மூலமாகவே பதிலடி தருவதற்காகவே முதல்வரும், அமைச்சர்களும் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.