தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலம் 67 வயதில் எம்.ஏ. பட்டம் பெற்ற 'மூதாட்டி செல்லத்தாயின், மேற்படிப்புக்கான செலவை அந்தப் பல்கலைக்கழகமே ஏற்க முன்வந்துள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் 16,879 மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 67 வயது மூதாட்டி செல்லத்தாயும் ஒருவர். முதுகலை பட்டப் படிப்பில் (எம்.ஏ.) வரலாறு துறையில் இவர் பட்டம் பெற்றார்.
இதுகுறித்து செல்லத்தாய், 'குடும்பச் சூழல், ஏழ்மையான நிலை காரணமாக இளமையில் படிக்க முடியாமல் போனது.
என்னுடைய நீண்ட நாள் கனவு இன்றுதான் நிறைவேறியுள்ளது. தொடர்ந்து ஆயுள் உள்ளவரை படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அடுத்து சட்டப் படிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்' என்றார். இதை அறிந்து, அவருடைய மேற்படிப்புக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்க திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
மூதாட்டி செல்லத் தாய் விருப்பம் அறிந்து, அவரை புதன்கிழமை பல்கலைக்கழகத்துக்கு அழைத்து துணைவேந்தர் மு.பாஸ்கரன் பாராட்டினார். அவருடைய மேற்படிப்புக்கான அனைத்துச் செலவுகளையும் பல்கலைக்கழகமே ஏற்கும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.