எல்லை தாண்டி இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடலோரக் காவல் படையினர் சென்னை துறைமுகத்தில் இருந்து 320 கடல் மைலுக்கு அப்பால் சாரங்க் கப்பலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அதையடுத்து அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் நெருங்கினர்.
இரத்த புத்த பெயரை தாங்கிய அந்த விசைப் படகில் மீனவர் குமாரா பிர்ணான்டோ உள்ளிட்ட 6 இலங்கை மீனவர்கள் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் படகுடன் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு சென்னை துறைமுகம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். துறைமுகம் போலீஸார் அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.