தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஒக்கி புயல் மிகக் கடுமையாக பாதித்துள்ளது.
மழை காரனமாக பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை - குமரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கனமழை காரணமாக செங்கோட்டை புளியரை வாகனசாவடியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 நிவாரண முகாம்களில் 1044 பேர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 முகாம்களில் 205 பேர்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பலத்த மழைக்கு கன்னியாகுமரியில் 4 பேரும், நெல்லையில் ஒருவரும் பலியாகினர். இதனால் மின்சாரம் கடந்த 2 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.