சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக அதிக தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. வெள்ளப் பெருக்கு குறித்து வியாழக்கிழமை அருவிப் பகுதிகளை பார்வையிட்ட மேகமலை வன உயிரின சரணாலய ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வியாழக்கிழமை காலை முதல் சுருளிஅருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கி உள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்து குளித்து செல்வது வழக்கம். குளிக்கத் தடை என்ற அறிவிப்பால், வியாழக்கிழமை வந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர், என்றாலும் அருவியைப் பார்த்து செல்ல வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். மேலும் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள், சுருளி அருவியின் ஆற்றில் குளித்து செல்கின்றனர். இது பற்றி வனத்துறை ஊழியர் ஒருவர் கூறும் போது, அருவியில் நீர்வரத்து குறைந்தால் குளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.