கடல் சீற்றம் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை 3-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கில் புதன்கிழமை நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வியாழக்கிழமை காலை புயலாக மாறியதால் பாம்பன் துறைமுகத்தில் இரண்டாவது நாளாக 3-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
பாம்பன் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுவதால், 30 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும், ராமேசுவரம், மண்டபம், தொண்டி, ஏர்வாடி, கீழக்கரை, நம்புதாளை, சோழியகுடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், இப்பகுதியில் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.