தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருள்காட்சி நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, திருப்பூரைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வரும் டிசம்பர் 3 -ஆம் தேதி முதல் அரசுப் பொருள்காட்சி நடைபெற உள்ளது. இந்தப் பொருள்காட்சி 45 நாள்கள் நடைபெறும். இதனால் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறுவதற்கு இடையூறாக இருக்கும். எனவே, இந்தப் பொருள்காட்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் திருப்பூர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ள பொருள்காட்சிக்கு தடைவிதிக்க முடியாது. இனிவரும் காலங்களில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி -பொருள்காட்சி நடத்தத் தடைவிதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.