சென்னை: சென்னைக்கு புயல் ஆபத்து எதுவும் இல்லை என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
நமது சென்னையை வரும் நாட்களில் மிகப்பெரிய புயல் தாக்கப் போகிறது என்று நம் ஊடகங்கள் கிளப்பிய பரபரப்பு அத்தனையும் வீண்.
அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் கடந்து சென்ற ஒக்கி புயலைதான் பரபரப்பான செய்தியாக மாற்றி இருக்க வேண்டும். அதை தவற விட்டுவிட்டோம். ஆனால், இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டுமே. இதற்கு இத்தனை பரபரப்பினை உண்டாக்க அவசியம் இல்லை. எனவே மக்களை அச்சுறுத்தும் விதமான புயல் செய்திகளை வெளயிடுவதை ஊடகங்கள் தவிர்க்கலாம்.
வரும் வாரத்தில் சென்னைக்கு எந்தவிதமான புயல் எச்சரிக்கையும் இல்லை. தற்போது உருவாகி இருப்பது கூட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மட்டுமே. அது அப்படியே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக உருவெடுத்தாலும் ஆந்திராவினை நோக்கி நகர்ந்து விடும். அது வலுவிழக்கவும் கூட வாய்ப்புகளிருக்கிறது.
இதன் மூலம் கண்டிப்பாக மழை இருக்கும்; ஆனால் வெள்ளம் வரும் அளவுக்கு மழை இருக்காது. கனமழையோ அல்லது மிகமிக கனமழையோ கூட இருக்கலாம். தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம். மக்களை மிரட்டாத அளவுக்கு கனமழை இருக்கும்.
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.