சென்னை: விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி, ., நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்களின் பரிசீலனை இன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் மருது கணேஷ், அதிமுகவின் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் மற்றும் பாஜக வேட்பாளர் நாகராஜன் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஆனால் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்ற பொழுது திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் எதிர்ப்பு தெரிவித்தனர். வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் பல விவகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல்வேறு விவரங்கள் தவறாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன் விஷால் ஆர்.கே.நகரில் குடியிருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அவரது மனுவினை முன்மொழிந்தவர்கள் பெயர் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக அங்கு குழப்பம் நிலவியது. இறுதியில் விஷால் வேட்பு மனுபரிசீலனை தற்பொழுது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இன்று மாலை தேர்தல் பார்வையாளர்கள் முன்னலையில் பரிசீலனை மீண்டும் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்பொழுது நடைபெற்ற பரிசீலனையில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
பொதுவாக ஒரு வேட்பாளரின் மனுவினை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் உள் 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால் விஷாலின் மனுவினை முன்மொழிந்தவர்கள்ல் இருவரது பெயர்கள் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை; எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி விளக்கமளித்தார்.