சென்னை: விமான நிலையத்தில் செய்தியாளாரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்து பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2013-ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் ரவீந்திரன் என்ற செய்தியாளாரைத் தாக்கியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தத் மீது ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் செவ்வாயன்று பிடி வாரண்ட் பிறப்பித்தது.
இதனை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால் விஜயகாந்தால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்து பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் இந்த வழக்கானது எதிர்வரும் பிபரவரி 13-ஆம் தேதியன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொழுது விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் நாடு திரும்பும் பொழுது அவரை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்ய தடை விதிப்பதாகவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.