சென்னை: அந்தமான் அருகே உண்டான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் ஆந்திரா - ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் மசூலிப்பட்டினத்தில் இருந்து 875 கி.மீ. தொலைவில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 10ம்தேதி வரையிலான காலக்கட்டத்தில் வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
இதனால் வட தமிழகம் மற்றும் ஆந்திர மீனவர்கள் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்பகுதி மீனவர்கள் வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. நெல்லையில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.