ஆர்.கே. நகரில் தேர்தலை முறையாக நடத்தினால் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்: மு.க.ஸ்டாலின்

ஆர்.கே. நகரில் தேர்தலை முறையாக நடத்தினால் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகரில் தேர்தலை முறையாக நடத்தினால் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்: மு.க.ஸ்டாலின்

ஆர்.கே. நகரில் தேர்தலை முறையாக நடத்தினால் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மடுமாநகரில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி நூலகத்துக்கு 400 புத்தகங்கள், 2 கணினி, ஒரு மடிக்கணினி, 350 ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். இதனையடுத்து, வார்டு 64, 65 மற்று 67 பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த முறை 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடாவை கண்டுப்பிடத்தவுடன் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நிறுத்தினார்கள். அதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தார்கள் என்றால், இந்த தேர்தல் நியாமாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, யார் மீதும் எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. அதில் சம்பந்தப்பட்டிருப்பது, ‘குதிரை பேர’ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏழெட்டு அமைச்சர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் எல்லாம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் ‘குட்கா புகழ்’ விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்துதான் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதெல்லாம் துளியளவுக்கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், இடைத்தேர்தலுக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலையாவது முறையாக நடத்திட வேண்டும் எனபதனால் தான் தேர்தல் ஆணையம் கூட, தேர்தலை முறையாக நடத்துவோம் என்றெல்லாம் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தேர்தலை முறையாக நடத்தினால் நிச்சயமாக, உறுதியாக திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். ஆனால், ரிட்டர்னிங் ஆபிசர் என்று சொல்லப்படும் ஆர்.ஓ நடிகர் விஷால் விவகாரத்தில் நடந்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கும்போது, இதுகுறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரித்து, என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்தால்தான் இந்த தேர்தல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஏற்படும், மக்களுக்கும் ஏற்படும்.

கேள்வி: தேர்தலை நிறுத்துவதற்கான சதி நடப்பதாக உங்களுடைய கூட்டணிக் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறாரே?
பதில்: இருக்கலாம். ஏற்கனவே திமுக வெற்றிப்பெற போகிறது என்பதனால்தானே 89 கோடி ரூபாய் விவகாரத்தை அடிப்படையாக வைத்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்போதும் அதுபோல செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், திமுக மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய நிலை இன்று உருவாகியிருக்கிறது.

கேள்வி: ஆளுநர் தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர்கள் தேர்தல் பணியில் ‘பிசி’யாக இருக்கிறார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: ஏற்கனவே கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு ஒரு முதல்வரை போல அல்லது அமைச்சர்களை போல ஒரு பெரிய சுற்றுப்பயணத்தையே நடத்தியிருக்கிறார், ஆய்வுப் பணிகளை நடத்தியிருக்கிறார். இப்போது திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியிருக்கிறார். கன்னியாகுமரிக்கும் செல்லவிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரை பொறுத்தவரையில், அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் ஆய்வு நடத்துவதற்கோ அல்லது மாவட்டவாரியாக சென்று மக்கள் பணிகளை கவனிப்பதற்கோ அதிகாரமும் உரிமையும் இல்லை என்றுதான் எடுத்துச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த ‘குதிரை பேர’ ஆட்சியைப் பொறுத்தவரையில், ஒரு அடிமை ஆட்சியாக நடந்துக் கொண்டிருப்பதால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒருவேளை நடக்கின்ற ‘குதிரை பேர’ ஆட்சி, ஒரு ஆட்சியே இல்லை என்று ஆளுநர் முடிவு செய்து ஆய்வுப் பணியில் இறங்கியிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த பணிகளில் ஈடுபடும் மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மெஜாரிட்டி இல்லாத இந்த ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்ககூடிய வகையில் சட்டப்பேரவையை கூட்டி, அந்த பணியை நிறைவேற்றுவார் என்றால், எல்லோரும் ஆளுநரை பாராட்டக் காத்திருக்கிறோம்.

கேள்வி: கன்னியாகுமரி மாவட்டத்தி இன்னும் 2000 மீனவர்களை காணவில்லை என்று மக்கள் கூறிவருகின்றனர். ஆனால், மாநில அரசு முறையான தகவல் வழங்கினால் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று மத்திய அரசி அமைச்சர்களே தெரிவித்திருக்கிறார்களே?
பதில்: கடந்த மாதம் 29ம் தேதி புயல் தாக்கிய சம்பவம் நடைப்பெற்றது. இன்று தேதி 7. இடையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டது. பத்து நாட்களாக எந்த கணக்கும் எடுக்கப்படவில்லை. கணக்கெடுப்பதற்கான பணிகளிலும் அரசு ஈடுபடவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஒரு கணக்கு சொல்கிறார், தலைமைச் செயலாளர் ஒரு கணக்கு சொல்கிறார், துணை முதல்வர் ஒரு கணக்கு சொல்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கு சொல்கிறார், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கணக்கு சொல்கிறார். இப்படிதான் குழப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர, முறையான கணக்கு எடுக்க அவர்களால் முடியவில்லை. ஏன், முடியவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com