ஆர்.கே. நகரில் தொப்பி சின்னம் கிடைத்தால் வெற்றி பெறுவோம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சென்ற முறை டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறையும் தொப்பி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று அவர் நம்பிகை தெரிவித்துள்ளார். ஆனால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் அளித்தவர்கள் பலரும் தொப்பி சின்னம் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஆர்.கே. நகரில் தொப்பி சின்னம் கிடைத்தால் வெற்றி பெறுவோம். உளவுத்துறை இந்த தகவலை அரசுக்கு சொன்னதாலேயே தொப்பி சின்னம் தர மறுக்கப்படுகிறது. ஆர்.கே. நகரில் தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் டிச.21-ஆம் தேதி நடைபெற உள்ளது.