சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது தொடர்பான விவரங்களை அளிக்க, விசாரணை ஆணையத்தின் முன்பு அரசு மருத்துவர் பாலாஜி இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.
அவருடன் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தின் முன்பு அரசு மருத்துவமனை மருத்துவர் தர்மராஜனும் ஆஜராகியுள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் ஏ.கே.போஸை அங்கீகரித்து தேர்தல் ஆவணத்தில் இடம்பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை பெற்றது தொடர்பாக அரசு மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் போட்டியிட்டார்.
அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸையும், அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரியும் , தனது இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவணப் படிவத்தில் ஜெயலலிதா பதிவு செய்து கொடுத்திருந்தார்.
அதை சென்னை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவரான பாலாஜி சான்றொப்பம் அளித்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்திருந்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த விசாரணை ஆணையம், சிகிச்சையின் போது ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் வகையில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனின் அடிப்படையில், மருத்துவர் பாலாஜி மற்றும் மருத்துவர் தர்மராஜன் இன்று நேரில் ஆஜராகியுள்ளனர்.