ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுத்திக்கான இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான நேரம் நிறைவு பெற்றதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 58 வேட்பாளர்கள்ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர்.
இதில் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். அதே சமயம் பல சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னம் கேட்டதால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளான நமது கொங்கு முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்தி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய 3 கட்சியின் வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரியிருக்கின்றனர்.
சின்னம் ஒதுக்குவதில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை என்பதால், டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் நிராகரிக்கப்பட்டது.