இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் விவரங்கள் தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக தேர்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 44 ஆயிரத்து 999 பேரின் பெயர்கள் போலியாக இருப்பதாக திமுக கோரிக்கை மனு அளித்தது. இதையடுத்து, வீடு வீடாக கள ஆய்வு செய்யும் பணியில் 256 வாக்குச் சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர்.
அதன்படி, இறந்தவர்கள், இரண்டு இடங்களில் பதிவு செய்தது, இடம் மாறியவர்கள் என்ற அடிப்படையில் 45 ஆயிரத்து 836 வாக்காளர்களின் பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 5 ஆயிரத்து 117 வாக்காளர்களின் பெயர்கள் இரட்டைப் பதிவு முறையில் இருப்பதாக திமுக மீண்டும் தெரிவித்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆயிரத்து 947 வாக்காளர்கள் இருப்பது தெரிய வந்தது. அப்பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் துறையின் இணையதளத்தில் (www.tnelections.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கும் தனியாக அளிக்கப்படும்.