சென்னை: கன்னியாகுமரி மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை நொச்சிக்குப்பத்தில் ஏராளமான மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒக்கி புயல் காரணமாக காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்பட்டதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், வெறும் 86 மீனவர்கள் மட்டும் மாயமானதாக தமிழக அரசு கூறிவருவதை எதிர்த்தும், கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியாக வந்து குழித்துறை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு வரை நீடித்த இந்த தர்ணா போராட்டம், மீனவர்கள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதி மொழியை ஏற்று, தாற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நொச்சிக்குப்பத்தில் உள்ள மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை காவல்துறையினர், பேருந்துகள் மூலம் சேப்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அதே சமயத்தில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலிலும் ஏராளமான மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.