தமிழ்நாடு தகவல் ஆணையாளர்கள் நியமனம் தொடர்பான உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷீலா ப்ரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று, தகவல் ஆணையாளர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்குமார், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோர் நியனம் செய்யப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் ஸ்வர்ணா குறிப்பிட்டுள்ளார்.
செல்வராஜ் வருவாய்க் கோட்டாட்சியராகவும், தமிழ்குமார், பிரதாப்குமார், முத்துராஜ் ஆகியோர் வழக்குரைஞர்களாகவும் உள்ளனர்.
தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையாளர் மற்றும் தகவல் ஆணையாளர்கள் அனைவரும் தாங்கள் பொறுப்பேற்ற தினத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது 65 வயது, இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை அந்தப் பொறுப்புகளில் இருப்பார்கள் எனவும் அதன்பிறகு ஓய்வு பெறுவர் என்றும் தனது உத்தரவில் ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
இன்று பதவியேற்பு: தலைமை தகவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா ப்ரியா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராக கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை இருந்தார். அதற்கு முன்பாக, தமிழக ஆளுநரின் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
தலைமை தகவல் ஆணையாளராக ஷீலா ப்ரியா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கவுள்ளார். ஆளுநர் மாளிகையில் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஷீலா ப்ரியாவுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழ்நாடு மாநிலத் தலைமை தகவல் ஆணையாளராக இருந்த முன்னாள் டிஜிபி ராமானுஜம் கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, புதிய தலைமை தகவல் ஆணையாளராக ஷீலா ப்ரியா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.