தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, வழக்கு குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சமூகநலத்துறை அமைச்சர் வி.சரோஜா.
தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்து, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சரோஜாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அதே தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து அமைச்சர் சரோஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, தனது வெற்றி நியாயமானது. எனவே இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சர் சரோஜாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தேர்தல் வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.