பழவேற்காட்டில் புயல் சின்னம், மழை காரணமாக, கடந்த 40நாள்களுக்கும் மேலாக மீன் பிடித்தொழிலுக்குச் செல்லாமல் முடங்கிக் கிடக்கும் மீனவர்கள், நிவாரண உதவித்தொகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் பழவேற்காடு உள்ளது.
கடலோரப் பகுதியான பழவேற்காட்டில், லைட் ஹவுஸ் குப்பம், கூனங்குப்பம், சாத்தாங்குப்பம், கோரைக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளன.
இக்கிராமங்களில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் மீன் பிடித்தொழில் செய்கின்றனர். பழவேற்காடு கடலில் பிடிக்கப்படும், வஞ்சிரம், கொடுவா, காளான் உள்ளிட்ட மீன்கள் சுவையாக இருப்பதன் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இங்கு சென்று மீன் வாங்கிச் செல்வர். அத்துடன் இங்கு பிடிக்கப்படும் மீன் மற்றும் இறால் ஆகியவை வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் காரணமாக கடல் அலை மற்றும் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து அவ்வப்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டம் மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக மீன் பிடித்தொழிலுக்குச் செல்லாமல் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
இழப்பீடு வழங்க கோரிக்கை:இதையடுத்து, கடந்த 40நாள்களுக்கும் மேலாக மழை மற்றும் புயல் சின்னம் காரணமாக மீன் பிடித்தொழிலுக்குச் செல்லாமல், வீட்டில் முடங்கிக் கிடங்கும் மீனவர்களுக்கு தாற்காலிக நிவாரண உதவித்தொகை அளிக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.