ஆந்திர மாநிலம், கடப்பா அருகே வியாழக்கிழமை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கடத்தல்காரர்களை எச்சரித்து ரூ. 2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடப்பா மாவட்டம், ரயில்வே கோடூரு அருகில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சுமார் 100 பேர் கும்பலாக செம்மரங்களை வெட்டி, கட்டைகளைச் சுமந்து சென்றதைக் கண்டனர். அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க போலீஸார் முயன்றனர். ஆனால் கடத்தல்காரர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இதையடுத்து போலீஸார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டு அவர்களை எச்சரித்தனர். இதனையடுத்து கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டைகளைப் போட்டு விட்டு வனத்திற்குள் தப்பியோடி விட்டனர். அவர்கள் விட்டு சென்ற ரூ. 2 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்து தப்பியோடிய கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர்.