வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் கைதி பேரறிவாளன், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறுநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேரறிவாளனுக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதனால், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தன்னை சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறு பேரறிவாளன் சிறைத் துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற சிறைத் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, அவர் விரைவில் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.