சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் முடிவில் 763 வேலைவாய்ப்புகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
சென்னை ஐஐடி-யில் முதல்கட்ட வளாகத் தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தம் 211 நிறுவனங்கள் பங்கேற்று மாணவர் தேர்வை நடத்தின. இதில் 1,100 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 62 சதவீத மாணவர்கள் 23 வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்பட மொத்தம் 763 வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சற்றுகூடுதலாகும். கடந்த 2016-17 கல்வியாண்டில் 10 வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்பட 745 வேலைவாய்ப்புகளை சென்னை ஐஐடி மாணவர்கள் பெற்றிருந்தனர்.
இதுகுறித்து சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆலோசகர் மானு சந்தானம் கூறியது:-
முதல் கட்ட வளாகத் தேர்வில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர் எண்ணிக்கையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. கடந்த ஆண்டு 56 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்ற நிலையில், இம்முறை இது 62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதே நேரம், முதுநிலை பொறியியல் பட்ட மாணவர்கள் கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
துறைகளைப் பொருத்தவரை கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின் பொறியியல் மற்றும் பொறியியல் வடிவமைப்பு ஆகிய இரு துறைகளைச் சேர்ந்த மாணவர்களை அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்தத் துறைகளிலிருந்து 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றார்.