உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை!

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு தூக்குத் தண்டனையும், மீதமுள்ள இருவருக்கு சிறை தண்டனையும் வழங்கி.. 
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு தூக்குத் தண்டனையும், மீதமுள்ள இருவருக்கு சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவரும், பழநியைச் சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, கடந்த 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலையில் சங்கர் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கௌசல்யாவும் படுகாயமடைந்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.

இச்சம்பவத்தையடுத்து,  இந்த வழக்கில் தொடர்புடையதாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உள்பட 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர்.

கூலிப்படையை வைத்து சங்கரைக் கொலை செய்ததாக, கௌசல்யாவின் பெற்றோர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் காவல்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டதும், நேரடி சாட்சியாக கௌசல்யாவின் வாக்குமூலமும் மிப்பெரிய பலமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இந்த வழக்கு வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில்  திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்தார்.

சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் 8 பேர் குற்றவாளிகள் என்றும் 3 பேரை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 8 பேர் குற்றவாளிகள் எனவும், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோரை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 8 பேருக்கும், பின்னர் சிறிது நேரம் கழித்து தண்டனை விபரங்களை நீதிபதி வெளியிட்டார். தண்டனை விபரம் பின்வருமாறு:

கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன் மற்றும் மதன் ஆகிய ஆறு பேருக்கு அவர்கள் மீது தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளிலும் இரட்டை தூக்குத் தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.மீதமுள்ள இருவரில் ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண் டனையும், மற்றொருவரான மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும்வழகி நீதிபதி அலமேலு நடராசன் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார்.

இன்று தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீதிமன்றத்தில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், சங்கர் வீட்டுக்கும் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com