திருச்சியில் சித்த மருத்துவரால் நடத்தப்பட்ட தனியார் ஸ்கேன் மையத்துக்கு 'சீல்' வைத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் எஸ். சம்சாத் பேகம் தலைமையிலான சிறப்புக் குழுவினர் தில்லை நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை கூடங்களில் திங்கள்கிழமை சோதனையிட்டனர்.
அப்போது, தில்லைநகர் 10 -ஆவது தெருவில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் சோதனை நடத்தியபோது, அங்கு சித்த மருத்துவம் படித்த நபர் மூலம், கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் பரிசோதனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்கேன் கருவி இருந்த அறையை மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும், மையத்துக்கான உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, இணை இயக்குநர் எஸ். சம்சாத் பேகம் கூறியது:
எம்பிபிஎஸ் மருத்துவம் படித்து, 6 மாதம் ஸ்கேன் கருவி இயக்குதல் தொடர்பான பயிற்சி முடித்த மருத்துவரைக் கொண்டு மட்டுமே கர்ப்பணிகளுக்கான ஸ்கேன் பரிசோதனை மையத்தை இயங்க வேண்டும்.
இல்லையெனில், ரேடியாலாஜிஸ்ட் பயின்ற நபர்கள் மூலமே இந்த மையத்தை இயக்க வேண்டும். ஆனால், இங்கு சித்த மருத்துவரைக் கொண்டு மையம் செயல்பட்டுள்ளது. எனவே, இந்த மையத்துக்கு உடனே சீல் வைத்து, அதன் உரிமமும் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.