ஆர்.கே.நகர்: முன்னாள் அமைச்சர் ரமணா பிரசாரத்தில் கல்வீச்சு: தினகரன் ஆதரவாளர்கள் - அதிமுகவினர் மோதல்

சென்னை ஆர்.கே. நகர், கொருக்குப்பேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா செவ்வாய்க்கிழமை பிரசாரம்

சென்னை ஆர்.கே. நகர், கொருக்குப்பேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் 10 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொருக்குப்பேட்டை, பாரதி நகர் பிரதான சாலை பகுதியில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ரமணா தொண்டர்களுடன், வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அப்பகுதியில், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 50 -க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். இருதரப்பினரும் கண்டன கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் மூண்டது.
அப்போது இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கல்வீச்சில் தினகரன் ஆதரவாளரான வட்டச் செயலாளர் பாலாஜியும், அதிமுக தரப்பில் சிலரும் காயமடைந்தனர். இருதரப்பினரின் புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணப்பட்டுவாடா புகார்: இதனிடையே, தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக தகவல் வந்ததையடுத்து, தினகரன் ஆதரவாளர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு நின்ற சொகுசுக் கார் ஒன்றில் பணம் இருப்பதாகக் கூறப்பட்டது. தகவலறிந்த போலீஸார் அங்கு செல்வதற்குள் கார் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைப் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com