ஒக்கி புயலால் இறந்த மீனவர்களுக்கு, திருநெல்வேலி மாவட்டம் உவரியில் கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் கடலில் மலர் தூவியும் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி, உவரி அந்திரேயா ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் அடிகளார், துணை பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர் தலைமையில், புயலால் இறந்த மீனவர்களுக்கு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலமாக கடற்கரைக்கு வந்தனர். அங்கு, புயலால் இறந்த மீனவர்களுக்கு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர், கடலில் இறங்கி மலர் தூவி மெழுகுவர்த்திகளை விளக்குப்போல கடலில் மிதக்கவிட்டு அஞ்சலி செலுத்தினர். மெளன அஞ்சலி, ஊர்வலத்தில் உவரி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.