குத்துச் சண்டையின்போது தலையில் பலத்த காயமடைந்த கேரளத்தை சேர்ந்த பயிற்சி ராணுவ வீரர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் எம்.எம். ஸ்காரியாவின் மகன் ரோனி ஸ்காரியா. கடந்த ஏப்ரல் மாதம் ராணுவத்தில் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குத்துச் சண்டையின்போது ரோனி ஸ்காரியாவுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பிலும், சிகிச்சை பலனின்றி ரோனி ஸ்காரியா திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.