மீன்பிடிப்பில் சுருக்குமடி வலைப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மீனவர் சங்கம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தனுஷ்கோடி பாரம்பரிய மீனவர் நலச் சங்கச் செயலர் பி.சி.அமுதன் தாக்கல் செய்த மனு விவரம்:
மீன்பிடிப்பதற்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் கொட்டுவலை (சுருக்கு மடி வலை) பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
ராமேசுவரத்தில் கொட்டுவலைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்வோர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த உத்தரவின் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
கொட்டுவலையின் தடிமன் 80 முதல் 120 மி.மீ. வரை மட்டுமே இருக்கும். 40 அடி நீளம் மட்டுமே இருப்பதால் இந்த வலையைப் பயன்படுத்தி பெரிய மீன்களை மட்டுமே பிடிக்க முடியுமாதலால் மீன்வளம் பாதிக்காது.
குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கொட்டுவலை பயன்படுத்தப்படுவதால் கடல் வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இந்நிலையில், கொட்டுவலையின் பயன்பாடுகள் குறித்து அதிகாரிகள் எவ்வித ஆய்வு நடத்தாமலும், மீனவர்களிடம் கலந்தாலோசிக்காமல் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரியமான மீன்பிடி முறை. எனவே கொட்டுவலைப் பயன்பாட்டிற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக்க் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.தாரணி அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.