ரஜினி பிறந்த நாள்: ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்தின் 68-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரைப் பார்ப்பதற்காக, சென்னையில் அவரது வீடு அமைந்துள்ள போயஸ் தோட்ட பகுதியில் ஏராளமான ரசிகர்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.
சென்னை, போயஸ் தோட்ட பகுதியில் உள்ள ரஜினி வீட்டுக்குச் செல்லும் வழியில் காத்திருந்த ரசிகர்கள்.
சென்னை, போயஸ் தோட்ட பகுதியில் உள்ள ரஜினி வீட்டுக்குச் செல்லும் வழியில் காத்திருந்த ரசிகர்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் 68-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரைப் பார்ப்பதற்காக, சென்னையில் அவரது வீடு அமைந்துள்ள போயஸ் தோட்ட பகுதியில் ஏராளமான ரசிகர்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனர். ஆனால், ரஜினிகாந்த் அதிகாலை 5 மணிக்கே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதால் நீண்ட நேரம் காத்திருந்து அவரைப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் கிடைத்த பின்னர், தனது பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். பின்னர் இந்த வழக்கத்திலிருந்து மாறி ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார். சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், தனது பிறந்த நாளில் வீட்டின் முன்பு கூடி நின்ற ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக சென்னை பெரு வெள்ளம், வர்தா புயலால் பாதிக்கப்பட்டதால் ரசிகர்களை சந்திக்கவில்லை.
அரசியல் பேச்சால் எதிர்பார்ப்பு: இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், அரசியல் களம் குறித்து பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். 'போர் வரும் போது அழைப்பு விடுக்கிறேன்' என்று அரசியல் களம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசியதால், ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ரசிகர்கள் ஏமாற்றம்: இந்த முறை பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதனால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்களும் போயஸ் தோட்டம் பகுதியில் செவ்வாய்க்கிழமை கூடினர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்தப் பகுதியில் குவிந்ததால், மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. ரஜினிகாந்த் எங்கே இருக்கிறார். ரசிகர்களைச் சந்திப்பாரா என்று எந்த ஒரு தகவலும் அவரது தரப்பிலிருந்து சொல்லப்படாததால், காத்திருந்த அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற்னர். ஒரு சிலர் மாலை நேரம் வரை அங்கேயே காத்திருந்து திரும்பினர். ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் யாரையும் சந்திக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com