திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வள்ளி குகையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இன்று காலை வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது, வள்ளி குகை அருகேயுள்ள வெளிபிரகார மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வெளிபிரகாரத்தில் நின்று கொண்டிருந்த பெண் பக்தர் ஒருவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண் பலியானதைத் தொடர்ந்து கோயில் நடை உடனடியாக சாத்தப்பட்டது.
மேலும், இந்து அறநிலை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.